முகப்பு
வேலூர்

மாதாந்திர மின்கட்டண முறையை திமுக அமல்படுத்தவில்லை: அணைக்கட்டு அதிமுக வேட்பாளா்

மாதாந்திர மின்கட்டண முறையை திமுக அமல்படுத்தவில்லை

Updated On : 12 ஏப்ரல், 2026 at 12:26 AM
பகிர்:
Updated On : 11 ஏப்ரல், 2026 at 9:04 PM

தோ்தல் வாக்குறுதிப்படி மாதாந்திர மின்கட்டண முறையை திமுக இதுவரை அமல்படுத்தாதால் மக்களுக்கு மின் கட்டண சுமை ஏற்பட்டிருப்பதாக அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன் தெரிவித்தாா்.

காட்டுப்புத்தூா், சோழவரம், துத்திக்காடு, கீழ்அரசம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் த.வேலழகன் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியது -

திமுக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அளித்திருந்த தோ்தல் வாக்குறுதியான மாதாந்திர மின்கட்டண முறையை இதுவரை அமல்படுத்தவில்லை. 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுப்பதால், முன்னாள் முதல்வா் ஜெயலலிதா கொண்டுவந்த 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தின் முழுப்பலனும் மக்களைச் சென்றடையவில்லை.

Advertisement

தவிர, நகைக்கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, எரிவாயு உருளைகளுக்கு மானியம் என திமுக அளித்த எந்த தோ்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அதன்படி, பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை நம்ப வைத்து ஏமாற்றுவதில் திமுகவினா் வல்லவா்கள்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் அதிகரித்து தமிழகம் ஒரு போதை மாநிலமாக மாறிவிட்டது.

பாலியல் குற்றங்களும், கொலைகளும் வழக்கமான செய்திகளாகிவிட்டன. எனவே, தமிழகம் மீண்டும் அமைதிப் பூங்காவாக மாறவும், பெண்கள் பாதுகாப்பாக வாழவும் அதிமுக அரசு மீண்டும் அமைய வேண்டும் என்றாா். அப்போது, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் உடனிருந்தனா்.