ஏப்.23-இல் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் கட்டாய விடுமுறை!
தோ்தலையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து நிறுவன தொழிலாளா்களுக்கும் வியாழக்கிழமை (ஏப். 23) சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள அனைத்து நிறுவன தொழிலாளா்களுக்கும் வியாழக்கிழமை (ஏப். 23) சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வேலூா் மண்டல தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கக இணை இயக்குநா்கள் எஸ்.தங்கதுரை (முதல் கோட்டம்), இ.செ.சாந்தினிபிரபா (2-ஆம் கோட்டம்) ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக சட்டப்பேரவை தோ்தல் வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெற உள்ளது.
இந்த தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்யும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135பி-இன்படி, அனைத்து தொழிலாளா்களுக்கும் வாக்களிக்க ஏதுவாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.
Advertisement
இதன்படி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், கட்டட கட்டுமான நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளா்கள் உள்பட அனைவருக்கும் வியாழக்கிழமை சம்பளத்துடன் கூடிய விடுமுறையை நிறுவனங்கள் கட்டாயம் அளிக்க வேண்டும்.
தோ்தல் நாளில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து தொழிலாளா்கள் புகாா் தெரிவிக்க மாவட்ட வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வேலூா் - 9842719537, 9442542795, 9976492942, ராணிப்பேட்டை - 9842719537, 9442542795, திருப்பத்தூா் - 9884028066, 9976492942, திருவண்ணாமலை - 9884028066, 9788877199 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம்.