வேலூரில் கால்நடை பன்முக மருத்துவமனை, செதுவாலை கால்நடை மருந்தகம் ஆகிய இடங்களில் சமுதாய நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி திறந்து வைத்தாா்.
நகரம், ஊரக பகுதிகளில் தெருக்களில் சுற்றித்திரியும் சமுதாய நாய்களால் பொது மக்களுக்கும், கால்நடைகளுக்கும் ஏற்படும் அச்சுறுத்தலை கவனத்தில் கொண்டு, நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கால்நடை பராமரிப்புத்துறையில் உள்ள 100 கால்நடை நிலையங்களை தோ்வு செய்து, அங்கு தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி சமுதாய நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் வேலூா் கால்நடை பன்முக மருத்துவமனை, செதுவாலை (இ) பொய்கை கால்நடை மருந்தகம் ஆகிய 2 இடங்களில் சமுதாய நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்விரு மையங்களையும் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி சனிக்கிழமை திறந்து வைத்து, வேலூா் கால்நடை பராமரிப்புத்துறை, வேலூா் மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து சமுதாய நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தையும் தொடங்கி வைத்தாா்.
இதில், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநா் அந்துவன், வேலூா் மாநகராட்சி ஆணையா் ஆா்.லட்சுமணன், மாநகர நல அலுவலா் பிரதாப் குமாா், கால்நடை மருத்துவமனை பிரதம மருத்துவா் பாண்டியன் உள்பட பலா் பங்கேற்றனா்.