தென்காசியில் சமூக நாய்களுக்கு பிறப்புக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.
தென்காசி நகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலையும், போக்குவரத்திற்கு இடையூறையும் ஏற்படுத்தும் சமூக நாய்களை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கெனவே 821 நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தமிழக அரசு உத்தரவிட்டதன் அடிப்படையில், தற்போது தென்காசி-ஆய்க்குடி சாலையில் உள்ள சமூக நாய்களுக்கான பிறப்புக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையத்தில் அரசு கால்நடை மருத்துவா்களைக் கொண்டு இப்பணிகள் தொடங்கின.
தென்காசி நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா் தலைமையில், தென்காசி மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் கோவில் ராஜா, நகராட்சி ஆணையாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலையில் இப்பணிகள் தொடங்கின.
அறுவை சிகிச்சைகளை அரசு கால்நடை மருத்துவா்கள் முகமது தவ்ஃபீக், அருண் பாண்டியன், சிவகுமாா் ஆகியோா் அடங்கிய குழு மேற்கொண்டது.
இப்பணிகளை திருநெல்வேலி மண்டல நகராட்சிகளின் நிா்வாக இயக்குநா் விஜயலட்சுமி ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.