உத்தரப்பிரதேசத்தில் வெடித்த சிறுநீரக மோசடி: ஒரு சிறுநீரகத்தின் விலை ரூ.50 லட்சம் முதல்...
உத்தரப்பிரதேசத்தில் சிறுநீரக மோசடி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து உருவான ஒரு பெரிய அளவிலான சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மோசடி, உத்தரப் பிரதேசத்தின் நான்கு நகரங்களில் உள்ள ஒன்பது மருத்துவமனைகளின் கூட்டுச் சதியுடன் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த மோசடியில் ஈடுபட்ட மருத்துவர்களால் 50-க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சிறுநீரகத்தைப் பெற்ற நோயாளிகளிடம் ரூ.50 லட்சம் முதல் ரூ.2.5 கோடி வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பீகாரைச் சேர்ந்த ஆயுஷ் என்ற நபர்,, தனது சிறுநீரகத்தை தானம் செய்தால் பெரிய தொகை கொடுப்பதாகக் கூறி மருத்துவமனை, வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் சொன்னதை விட மிகக் குறைவான தொகையே தனக்கு வழங்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.
Advertisement
இந்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணையைத் தொடங்கி, பல மருத்துவர்கள், ஆய்வக உதவியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலரைக் கைது செய்து மிகப்பெரிய மோசடி கும்பலை கண்டுபிடித்தது. இதில் பலர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட 15 குற்றவாளிகளில், இதுவரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மருத்துவர்கள், மருத்துவமனை உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களும் அடங்குவர் என்று காவல்துறை அதிகாரி கூறினார்.
மருத்துவர்களாகப் பயிற்சி பெற்ற மோசடியாளர்கள், நள்ளிரவில் மட்டுமே தங்கள் நடமாட்டத்தை மேற்கொண்டு சிறுநீரகத்தைப் பெறுவது, மாற்று அறுவை சிகிச்சை செய்வது, பிறகு விடியலுக்குள் தங்கள் இடங்களுக்குச் சென்று விடுவது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை கூறுகிறது.