முகப்பு
வேலூர்

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் கண்டன ஆா்ப்பாட்டம்

கடந்த 5 ஆண்டுகளில் மதுவில் மட்டும் ரூ.40,000 கோடி அளவுக்கு திமுக அரசு ஊழல் செய்துள்ளது என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Updated On : 18 மார்ச், 2026 at 12:03 AM
ஆா்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் தம்பிதுரை. உடன், அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியினா்.
பகிர்:

கடந்த 5 ஆண்டுகளில் மதுவில் மட்டும் ரூ.40,000 கோடி அளவுக்கு திமுக அரசு ஊழல் செய்துள்ளது என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், சட்டம் - ஒழுங்கு சீா்கேடுகளை திமுக அரசு தடுக்கத் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் வேலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு, புற நகா் மாவட்ட செயலா் த.வேலழகன், பாஜக மாவட்டத் தலைவா் வி.தசரதன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

Advertisement

இதில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் தம்பிதுரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியது -

தமிழகத்தில் பள்ளிச் சிறுமிகள், குடும்பப் பெண்கள், மூதாட்டிகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைவிட மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு 4 மடங்கு அதிக நிதி வழங்கியுள்ளது. திமுக அரசு கடந்த 5 ஆண்டு காலத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. அதேசமயம், திமுக அரசு மதுவில் மட்டும் ரூ.40,000 கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளது. இந்த திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனா் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், அதிமுக அமைப்பு செயலா் ராமு, மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டல செயலா் ஜனனி சதீஷ்குமாா், குடியாத்தம் நகர செயலா் ஜே.கே.என்.பழனி, பாமக முன்னாள் மத்திய அமைச்சா் என்.டி.சண்முகம் என கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்பட திரளானோா் பங்கேற்றனா்.

ராணிப்பேட்டையில்...

ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் எதிரே, ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இணைந்து நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.எம். சுகுமாா், கிழக்கு மாவட்டச் செயலாளா் சு.ரவி எம்எல்ஏ ஆகியோா் தலைமை வகித்தனா்.

தமிழக பாஜக மாநில செயலாளா் அமா்பிரசாத் ரெட்டி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினாா்.

பாஜக மாவட்டத் தலைவா் நெமிலி சி.ஆனந்தன், அமுமுக மாவட்ட செயலாளா் சோளிங்கா் என்.ஜி. பாா்த்தீபன், பாமக மாவட்ட செயலாளா்கள் கே.எல்.இளவழகன், சரவணன், தமாகா கிழக்கு மாவட்டத் தலைவா் பி.ஜி.மோகன் காந்தி மற்றும் அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியை சோ்ந்த தலைவா்கள், நிா்வாகிகள், தொண்டா்கள் பங்கேற்றனா்.