பொங்கலுக்கு தவிக்கும் ஏழைகள்!
குன்னூர், ஜன. 7: குடும்ப அட்டைகள் அடமானத்தில் இருப்பதால் பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்கும் இலவசப் பொருள்களைப் பெற முடியாமல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தவிக்கின்றனர். தமிழர் திருநாளான பொங்கல்
குன்னூர், ஜன. 7: குடும்ப அட்டைகள் அடமானத்தில் இருப்பதால் பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்கும் இலவசப் பொருள்களைப் பெற முடியாமல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் தவிக்கின்றனர்.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள், பலருக்கு மகிழ்ச்சியை உருவாக்கும் அதே நேரத்தில் குன்னூரில் வாழும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் வழக்கமான நாளாகவே தொடர உள்ளது.
குன்னூர் நகரப் பகுதியில் பல ஆண்டுகளாக வறுமைக் கோட்டிற்கு கீழ் மக்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தேயிலைத் தோட்டங்களிலும், கட்டட வேலைகளிலும், இன்னும் பலர் கூலிகளாகவும் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யவே தடுமாறி வரும் இவர்களின் இல்லங்களில் ஏதேனும் திருமணம், அல்லது துக்க சம்பவங்கள் நேர்ந்தால், இவர்களிடம் தங்கத்திற்கு ஈடாக அடகு வைக்க கையில் இருப்பது குடும்ப அட்டை மட்டுமே.
Advertisement
இந்த குடும்ப அட்டையை அடகுக்குப் பெறுவோர், தாங்கள் தரும் பணத்திற்கு 10 முதல் 15 சதவீதம் வரை வட்டியை வசூலிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த அட்டைக்கான பொருள்களையும் மாதம் தவறாமல் வாங்கிக் கொள்கின்றனர். இவ்வாறு வாங்கும் அரிசி,சர்க்கரை, மண்ணெண்ணை, பாமாயில், உள்ளிட்ட மளிகைப் பொருள்களையும், பண்டிகைக் காலங்களில் வழங்கும் இலவசப் பொருள்களையும் இவர்களே அனுபவிப்பதோடு, இவற்றை வெளிச் சந்தையில் அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபமும் சம்பாதிக்கின்றனர்.
பணத்தைப் பெற்றவர்கள் குடும்ப அட்டையை மீட்கும் வரை, இந்த பகல் கொள்ளை தொடர்கிறது.
குடும்ப அட்டைகளை அடமானத்திற்குப் பெறுபவர்களுக்கும், நியாயவிலைக் கடைக்காரர்களுக்கும் இடையே எழுதப்படாத ஒரு உடன்பாடு எப்போதும் உண்டு. குடும்ப அட்டை உரிமையாளர்கள் வரவில்லை என்றாலும், அடமானதாரர்களுக்கு அனைத்துப் பொருள்களும் விசாரணை இன்றி உரிய நேரத்தில் தவறாமல் விநியோகிக்கப்பட்டுவிடும்.
அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நியாயவிலைக் கடைகளில் அதிரடி சோதனை மேற்கொள்வதன் மூலமே இந்த பகல் கொள்ளையைத் தடுக்க முடியும். இதுபோன்ற அடமான குடும்ப அட்டைகளை கண்டறியாவிட்டால், இலவசப் பொருள்களையும், வேட்டி, சேலைகளையும் பெற முடியாத இந்த மக்களுக்கு தொடரும் துன்பத்தை தடுக்கமுடியாமல் போகும். அதிகாரிகள் கருணைகாட்டினால் மட்டுமே குன்னூர்வாழ் ஏழைகளுக்கு பொங்கல் திருநாள் கொண்டாடும் வாய்ப்பு கிடைக்கும்.