கிணற்றில் தவறி விழுந்து மாணவர் சாவு
சூலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
சூலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
இது குறித்துப் போலீஸார் கூறியது: மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்தவர் முத்து சடையாண்டி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களது மகன் சுந்தரமகாலிங்கம் (11).
குடும்பத் தகராறு காரணமாக கணவரைப் பிரிந்து கோவை மாவட்டம், சூலூர் ராசிபுரத்தில் மகனுடன் வசித்து வந்தார் பழனியம்மாள். இங்கு அருகே உள்ள மில்லில் வேலை செய்து வருகிறார் பழனியம்மாள்.
Advertisement
Advertisement
சுந்தரமகாலிங்கம் அப் பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். வெள்ளிக்கிழமை நண்பர்களுடன் வீட்டின் அருகில் அவர் கிரிக்கெட் விளையாடியபோது, அவர்களது வீட்டுக் கூரையில் சிக்கியது பந்து. வீட்டுக் கூரையில் ஏறிய சுந்தரமகாலிங்கம், பந்தை எடுக்க முயன்றபோது, அவர் கால் வைத்திருந்த ஓடு உடைந்ததாகவும், இதனால் நிலை தடுமாறிய அவர், வீட்டு வளாகத்தில் உள்ள 150 அடி ஆழக் கிணற்றில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
தகவலறிந்த பீளமேடு தீயணைப்பு நிலைய அலுவலர் தெüலத் முகமது, சிவராஜ், ஸ்ரீதர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சூலூர் போலீஸாரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
கிணற்றில் 50 அடி ஆழத்துக்குத் தண்ணீர் இருந்ததாலும், மிகவும் குறுகலான கிணறு என்பதாலும் இரவு நேரத்தில் சிறுவனின் உடலை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை கிணற்று நீர் முழுவதையும் மோட்டார் வைத்து வெளியேற்றிய பின், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கிணற்றில் இறங்க முயன்றனர்.
ஆனால், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தீயணைப்புத் துறையினர் வரும் வரை காத்திருந்தனர்.
பிறகு தீயணைப்புத் துறையினர் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கிணற்றின் அடியில் சிக்கியிருந்த மாணவரின் உடலை சனிக்கிழமை இரவு மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது.