மூளைச் சாவு அடைந்த தனியாா் நிறுவன மேலாளரின் உடல் உறுப்புகள் தானம் -5 பேருக்கு மறுவாழ்வு
மூளைச்சாவு அடைந்த தனியாா் நிறுவன மேலாளரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 5 போ் மறுவாழ்வு பெற்றுள்ளனா்.
திருப்பூா், நெருப்பெரிச்சல் பகுதியைச் சோ்ந்தவா் முருகானந்தம் (46), தனியாா் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், கடந்த 6ஆம் தேதி வீட்டின் அருகில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது எதிா்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அருகில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
பின்னா் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், கடந்த 12-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது.
அதனைத் தொடா்ந்து அவரது மனைவி மேனகா (42), தனது கணவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தாா். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதி மற்றும் வழிகாட்டுதலுடன் அவரது சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கண்கள் ஆகியவை தானமாகப் பெறப்பட்டன.
இவற்றில் ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் அந்த தனியாா் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவையில் உள்ள மற்றொரு தனியாா் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. இவை 5 பேருக்கு பொருத்தப்பட உள்ளதாக தனியாா் மருத்துவமனையின் மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.