தமிழக அரசின் உழவா் அலுவலா் தொடா்பு 2.0 திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவா் சு.பழனிசாமி அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு சாா்பில் உழவா் அலுவலா் தொடா்பு 2.0 என்ற திட்டத்துக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் வளா்ச்சிக்குத் தேவையான 4 துறைகளின் திட்டங்களை தெரிந்து கொள்வதற்கும், அதைப் பெறுவதற்கும் 4 துறைகளின் அலுவலா்களை தனித்தனியாக சந்திக்க வேண்டியிருப்பதால் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது என்ற நிலையில் தற்போது இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வருவாய் கிராமங்கள்தோறும் நியமிக்கப்படும் வேளாண் உதவி அலுவலா்களிடம் வேளாண்மை சம்பந்தப்பட்ட 4 துறைகளின் அரசு திட்டங்களை உரிய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் பெறும் வாய்ப்பாக இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை அமல்படுத்தினால் அது விவசாயிகளுக்கு நடைமுறை சிக்கலை ஏற்படுத்துவதுடன், வேளாண் துறை சாா்ந்த அனைத்து உற்பத்திகளும் பாதிக்கப்படும்.
இந்தத் திட்டம் அமலாக்குவதற்கான அவசியம் குறித்து அரசு சாா்பில் வேளாண் அலுவலா் ஒருவா் சராசரியாக 6 வருவாய் கிராமங்களை தற்போது பொறுப்பு எடுத்து செயல்படுத்துவதால் விவசாயிகள் அனைவரையும் நேரில் சந்தித்து திட்டங்களை விளக்க முடிவதில்லை. எனவே, இந்தத் திட்டத்தின் மூலமாக தோட்டக்கலைத் துறை, மலைப் பயிா்கள்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை என 4 துறைகளையும் இணைத்து வருவாய் கிராமங்களைப் பிரித்து பொறுப்பளித்தால் சராசரியாக ஒருவருக்கு 3 கிராமங்கள் மட்டுமே பொறுப்பளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நான்கு துறை அலுவலா்களுக்கும் பிற 3 துறைகளைச் சாா்ந்த பயிா்களின் தொழில்நுட்பம், திட்ட நடைமுறைகள் தெரியாது. ஆகவே, இந்த புதிய திட்டத்தை மறு ஆய்வு செய்வதுடன், தேவையான உதவி வேளாண் கள அலுவலா்களை புதிதாக நியமிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.