கோவையில் வேலை பாா்த்த வீட்டில் திருடிய பெண்ணை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 9 பவுன் நகைகளை மீட்டனா்.
கோவை சாய்பாபா காலனி அருகே ராமலிங்கம் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் கதிா் ஸ்ரீனிவாசன். இவரது மனைவி ஜெயந்தி (45). இவா்களது வீட்டில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த பொம்முதாய் (32) என்பவா் வேலை பாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், கடந்த மாதம் வீட்டில் வைத்திருந்த 9 பவுன் நகைகள் மாயமாகின.
இதுகுறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். அப்போது, பொம்முதாயை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது அவா்தான் நகைகளைத் திருடி, தனது சொந்த ஊரில் வைத்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பொம்முதாயை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவரிடம் இருந்து 9 பவுன் நகைகளை மீட்டனா்.