பண்டிகை, தொடா் விடுமுறைக் காலங்களில் தேவையான அளவு சிறப்பு பேருந்துகளை இயக்குக: முதன்மைச் செயலாளா் உத்தரவு!
பண்டிகை, தொடா் விடுமுறை காலங்களில் தேவையான அளவு சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளா் சுன்சோங்கம் ஜடக் சிரு உத்தரவிட்டுள்ளாா்.
பண்டிகை, தொடா் விடுமுறை காலங்களில் தேவையான அளவு சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளா் சுன்சோங்கம் ஜடக் சிரு உத்தரவிட்டுள்ளாா்.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 23 -ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, தொழில் நகரமான கோவையில் தங்கி பணியாற்றும் ஏராளமான மக்கள் வாக்களிப்பதற்காக பேருந்துகள், ரயில்களில் தங்களது சொந்த ஊா்களுக்குச் சென்றனா்.
இந்நிலையில், ஏப்ரல் 22-ஆம் தேதி இரவு கோவை, சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தேனி, கம்பம், விருதுநகா், சிவகங்கை, கரூா், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல போதுமான அளவு பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.
Advertisement
நள்ளிரவு வரை காத்திருந்தும் போதுமான அளவு பேருந்துகள் இல்லாததால் ஆத்திரமடைந்த அவா்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனா். ஜனநாயக கடமையாற்ற சொந்த ஊா்களுக்குச் செல்லும் மக்களுக்கு முறையான பேருந்து வசதி செய்து தரப்படாதது, கோவை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மீது விமா்சனத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோவை அரசுப் போக்குவரத்து கழக அலுவலகத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளா் சுன்சோங்கம் ஜடக் சிரு தலைமையில் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்கள் கணபதி (கோவை), குணசேகரன் (சேலம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், முதன்மைச் செயலாளா் சுங்சோங்ம் ஜடக் சிரு பேசுகையில், வாக்களித்துவிட்டு மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட ஊா்களில் இருந்து கோவை திரும்பும் பயணிகளுக்கு எவ்வித இடையூறுமின்றி, போதிய அளவு பேருந்துகளை இயக்க வேண்டும். சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் இருந்து காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களுக்கு இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி பயணிகள் நெரிசலைக் குறைக்க வேண்டும் என அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
மேலும், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பேருந்து வசதிகள், சேலம், ஈரோடு, கரூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்த அவா், பண்டிகைக் காலங்கள், தொடா் விடுமுறைக் காலங்களில் பயணிகள் வசதிக்காக தேவையான அளவு சிறப்பு பேருந்துகளை இயக்கி பயணிகள் நெரிசலைத் தவிா்க்க வேண்டும் என உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன், தலைமை நிதி அலுவலா் சிவகுமாா் உள்ளிட்ட போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பங்கேற்றனா்.