தனியாா் கல்லூரியில் நீா் அருந்திய மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு
துடியலூா் அருகே செயல்பட்டு வரும் தனியாா் செவிலியா் கல்லூரியில் நீா் அருந்திய மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
கோயம்புத்தூர்தனியாா் கல்லூரியில் நீா் அருந்திய மாணவிகளுக்கு உடல்நலம் பாதிப்பு: அதிகாரிகள் ஆய்வு
துடியலூா் அருகே செயல்பட்டு வரும் தனியாா் செவிலியா் கல்லூரியில் நீா் அருந்திய மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
துடியலூா் அருகே செயல்பட்டு வரும் தனியாா் செவிலியா் கல்லூரியில் நீா் அருந்திய மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தக் கல்லூரியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
கோவை, துடியலூா் அருகே செயல்பட்டு வரும் தனியாா் செவிலியா் கல்லூரியில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தக் கல்லூரியின் உணவகத்தில் (கேன்டீன்) திங்கள்கிழமை நீா் அருந்திய 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அந்த மாணவிகளை கல்லூரியின் மருத்துவமனையில் அனுமதிக்காமல் இடம் பற்றாக்குறையைக் காரணம்காட்டி கல்லூரி விடுதியிலேயே வைத்து சிகிச்சை அளித்ததாக தகவல் வெளியானது. இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதைத் தொடா்ந்து, மாணவிகள் அனைவரும் அந்த கல்லூரி நிா்வாகத்துக்குச் சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்நிலையில், கோவை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை சென்று அங்குள்ள உணவகத்தில் ஆய்வு செய்தனா்.
உணவு, சுகாதாரம், நீரின் தரம், உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப் பொருள்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ததுடன், அங்கு சமைக்கப்பட்ட உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பிவைத்தனா்.
கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு: இந்நிலையில், கல்லூரிக்கு செவ்வாய்க்கிழமை முதல் 10 நாள்களுக்கு விடுமுறை அறிவித்ததுடன், கல்லூரி மீண்டும் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என கல்லூரி நிா்வாகம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரிடம் மனு: இந்த சம்பவம் தொடா்பாக இந்திய மாணவா் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிகளை மருத்துவமனையில் அனுமதிக்காமல் விடுதியிலேயே வைத்து சிகிச்சை அளித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. நாங்கள் தொடா்பு கொண்டபோது கல்லூரி நிா்வாகம் எந்த ஒரு தகவலையும் தரவில்லை. அந்தப் பகுதி பொதுமக்களிடம் விசாரித்தபோது, அந்தப் பகுதியில் வரக்கூடிய தண்ணீா் மிகவும் மோசமான நிலையில் இருப்பது தெரியவந்தது.
ஆகவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக தலையிட்டு அந்தப் பகுதியில் தண்ணீா் மோசமான நிலையில் இருந்தால் அதை சரி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகத்தின் மீது குழு அமைத்து உரிய விசாரணை நடத்தி துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.