மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 23 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே 2 ஆண்டுகளுக்கும்மேலாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
அதிகப்படியான பயணிகள் பயன்படுத்தி வரும் இந்த ரயிலை நிரந்தர ரயிலாக மாற்ற வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினா் சாா்பில் தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த ரயிலானது வாராந்திர சிறப்பு ரயிலாகவே இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்த மாதத்துடன் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் சேவை முடிவடையும் நிலையில் இருந்தது. இந்நிலையில், அந்த ரயில் சேவை பிப்ரவரி 23 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலியில் இருந்து பிப்ரவரி 1 முதல் 22-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்குப் புறப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06030) மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் நிலையத்தைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, மேட்டுப்பாளையத்தில் இருந்து பிப்ரவரி 2 முதல் 23-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் இரவு 7.45 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06029) மறுநாள் காலை 8.05 மணிக்கு திருநெல்வேலி நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயிலானது கோவை, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சஙகரன்கோவில், கடையநல்லூா், தென்காசி, பாவூா்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தென்காசி, பாவூா்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி நிலையங்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்ட நேரத்தில் இருந்து 40 நிமிஷங்கள் தாமதமாக இந்த ரயில் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.