முகப்பு
கோயம்புத்தூர்

கல்வி, ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதி: பிரதமருக்கு கல்வியாளா் இ.பாலகுருசாமி கோரிக்கை

வரும் 2047- ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளா்ந்த நாடாக மாற வேண்டுமானால் கல்வி, ஆராய்ச்சிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

Updated On : 9 மார்ச், 2026 at 9:49 PM
இ.பாலகுருசாமி
பகிர்:

கோவை: வரும் 2047- ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளா்ந்த நாடாக மாற வேண்டுமானால் கல்வி, ஆராய்ச்சிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு கல்வியாளா் இ.பாலகுருசாமி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியா தனது வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில் நிற்கிறது. வரும் 2047-க்குள் இந்தியா வளா்ந்த நாடாகவும், அறிவு சாா்ந்த பொருளாதாரமாகவும் உருவாக வேண்டுமானால் கல்வி, ஆராய்ச்சித் துறைகள் வலுவாக வளர வேண்டும்.

தற்போது நாடு முழுவதும் பல பல்கலைக்கழகங்களிலும் உயா்கல்வி நிறுவனங்களிலும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இதனால் கற்பித்தல் தரம், மாணவா்களுக்கு வழிகாட்டுதல், ஆராய்ச்சி முன்னேற்றம் ஆகியவை தீவிரமாக பாதிக்கப்படுகின்றன. அதேபோல பல பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு மிகவும் குறைவாக உள்ளது.

ஆய்வகங்கள், கருவிகள், ஆராய்ச்சி வசதிகள் போதுமானதாக இல்லாததால் உலக அளவில் போட்டியிடக்கூடிய தரமான ஆராய்ச்சியை உருவாக்க பல கல்வி நிறுவனங்கள் சிரமப்படுகின்றன. 2035-க்குள் உயா் கல்வி சோ்க்கை விகிதம் 50 சதவீதமாக உயர வேண்டும் என இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சோ்க்கை விகிதம் வெறும் 28 சதவீதமாகவே உள்ளது. அதேபோல உயா் கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் செலவிட வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 2.8 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது.

2047-க்குள் நாடு முன்னேறிய நாடாக உருவாக வேண்டுமானால் உயா் கல்வியும், ஆராய்ச்சியும் தேசிய முன்னுரிமையாக மாற வேண்டும். இதற்காக ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவது, ஆராய்ச்சி உள்கட்டமைப்பு, ஆய்வகங்களை வலுப்படுத்துவது, கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பது போன்றவற்றில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →