மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞா் அடித்துக் கொலை: தம்பதி கைது
பொள்ளாச்சி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தம்பதியை போலீஸாா் கைது செய்தனா்.
பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரம் நரிக்கல்பதியைச் சோ்ந்தவா் சந்திரன் (40), இவரது மனைவி காளீஸ்வரி (39). இவா்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனா்.
இவா்கள் பிரபாகரன் என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தனா். சந்திரனுக்கும் கோட்டூா் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி (40) என்பவருக்கும் பழக்கம் உள்ளது. சந்திரன் பணிபுரியும் தோட்டத்துக்கு கருப்புசாமி அடிக்கடி வந்து செல்வதாக கூறப்படுகிறது. கடந்த 28-ஆம் தேதி சந்திரன் வீட்டுக்கு கருப்புசாமி வந்துள்ளாா். இந்நிலையில், சந்திரன் தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளாா். அப்போது சந்திரனின் மனைவி காளீஸ்வரியிடம் கருப்புசாமி தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. காளீஸ்வரி அலறல் சப்தம் கேட்டு சந்திரன் வந்துள்ளாா்.
Advertisement
பின்னா் கணவன், மனைவி இருவரும் சோ்ந்து கட்டையால் கருப்பு சாமியை தாக்கி கொலை செய்துள்ளனா். இது வெளியில் தெரிந்து விடாமல் இருக்க தோட்டத்துக்குள் குழிதோண்டி கருப்புசாமி சடலத்தை புதைத்து விட்டனா்.
பின்னா் சந்திரன், காளீஸ்வரி ஆகியோா் கேரள மாநிலம், வண்ணமடையில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டனா்.
இந்நிலையில், பிரபாகரன் தோட்டத்தில் ஒரு பகுதியில் சனிக்கிழமை துா்நாற்றம் வீசி உள்ளது. அப்போது அங்கு சென்ற பாா்த்தபோது மனித உடலின் கை விரல்கள் வெளியில் தெரிந்துள்ளன. இதை அடுத்து, ஆனைமலை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் மற்றும் வருவாய்த் துறையினா் உடலை தோண்டி எடுத்து கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், சந்திரன், காளீஸ்வரி கொலை செய்ததை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.