முகப்பு
கோயம்புத்தூர்

ஆகாயத்தாமரையும் ஆக்கிரமிப்பு: குறிச்சி குளத்தை கலங்கடிக்கும் கழிவு நீர்!

கோவை குறிச்சி குளத்தில் கலக்கும் சாக்கடைக் கழிவு நீரால் ஆகாயத் தாமரை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Updated On : 8 ஆகஸ்ட், 2014 at 4:45 AM
பகிர்:

கோவை குறிச்சி குளத்தில் கலக்கும் சாக்கடைக் கழிவு நீரால் ஆகாயத் தாமரை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

 மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக கன மழை பெய்து வருவதால், நொய்யலில் ஏற்பட்ட அதிக நீர்வரத்தின் காரணமாக கோவையில் உள்ள முக்கிய குளங்கள் நிரம்பி வருகின்றன.

 கடந்த இரண்டு ஆண்டுகளாக வறண்டு கிடந்த குறிச்சி குளத்திற்கும், பேரூர் நொய்யல் ஆற்றிலிருந்து ராஜவாய்க்கால் வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குறிச்சி குளம் சுமார் 325 ஏக்கர் பரப்பளவை கொண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக குளத்தின் நீர்வழிப் பாதையில் இருந்த புதர் உள்ளிட்டவற்றை விவசாயிகள் சங்கம், குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கம் மற்றும் பொது மக்கள் தூர்வாரி அகற்றினர். இதைத் தொடர்ந்து நொய்யல் ஆற்று நீர் தடையின்றி வந்து கொண்டிருக்கிறது. இக் குளம் நிரம்பினால் அப்பகுதியில் சுமார் 20 கி.மீ. சுற்றளவு பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனிடையே குனியமுத்தூர் பகுதியிலிருந்து பல்வேறு வழித்தடங்களில் சாக்கடைக் கழிவு நீர் இக் குளத்தில் கலக்கிறது. இதனால், குளத்தின் இயற்கைத் தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும், சாக்கடைக் கழிவு நீரால் குளக்கரையை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை குளம் முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

 இதுகுறித்து, விவசாயிகள் சங்க (கட்சி சார்பற்றது) தலைவர் வழுக்குப்பாறை பாலு கூறியது:

 குறிச்சி குளத்தில் சாக்கடைக் கழிவு நீர் அதிகம் கலப்பதால் குளத்து நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். சாக்கடை நீர் கலப்பதை தடுக்க வேண்டும். அதிக சாக்கடை நீர் கலந்தால் குளம் முழுவதும் ஆகாயத்தாமரையால் ஆக்கிரமிக்கப்படும் என்றார்.

 குறிச்சி குளம் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த தீபம் சுவாமிநாதன் கூறுகையில், குறிச்சி குளத்தில் 7 இடங்களிலிருந்து வரும் சாக்கடைக் கழிவு நீர் கலக்கிறது.  சாக்கடை நீரால் ஆகாயத்தாமரை குளக்கரையை ஆக்கிரமித்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் சில மாதங்களில் குளம் முழுவதையும் ஆகாயத்தாமரை ஆக்கிரமிக்கும். மேலும், மீன்வளம் பாதிக்கப்பட்டு பறவைகள் வருகை குறையும். அப்பகுதியைச் சுற்றிலும் கொசு அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்படும். மாநகராட்சி நிர்வாகம் இப் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.