கோவை, தொண்டாமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தாக்கியதில் கல்லூரி மாணவருக்கு செவித்திறன் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து பேரூர் டி.எஸ்.பி. தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கோவை, நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (18), இவரது நண்பர்கள் மிதுன் (19), முத்துகுமார் (18). இவர்கள் சரவணம்பட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இம்மூவரும் செவ்வாய்க்கிழமை தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது உதவி ஆய்வாளர் மாதவன் மாணவர்களின் இருசக்கர வாகனத்தை நிறுத்தச் சொல்லியுள்ளார். ஆனால் மாணவர்கள் சிறிது தூரம் தள்ளிச் சென்று வாகனத்தை நிறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் மாதவன், மாணவர் மிதுனை அடித்தாராம். பின்னர் மூவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும், வாகனத்தை ஓட்டி வந்த தினேஷ் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதனிடையே உதவி ஆய்வாளர் தாக்கியதில் மிதுனின் காதில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. அங்கிருந்த நண்பர்கள் அவரை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவரைத் தாக்கிய உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டி.எஸ்.பி. விசாரணை: இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.மூர்த்தியிடம் கேட்டபோது, இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்களிடமிருந்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. எனினும் இதுகுறித்து பேரூர் டி.எஸ்.பி.வேல்முருகன் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.