முகப்பு
கோயம்புத்தூர்

கடலோரக் காவல்படையைக் கண்டித்து  ஆர்ப்பாட்டம் நடத்திய 27 பேர் கைது

தமிழக மீனவர்களைத் தாக்கிய  இந்திய கடலோர காவல்படையைக் கண்டித்தும், தமிழக ஆளுநரைக் கண்டித்தும் தமிழ்நாடு திராவிடர் கழகம் சார்பில்  வியாழக்கிழமை பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

தமிழக மீனவர்களைத் தாக்கிய  இந்திய கடலோர காவல்படையைக் கண்டித்தும், தமிழக ஆளுநரைக் கண்டித்தும் தமிழ்நாடு திராவிடர் கழகம் சார்பில்  வியாழக்கிழமை பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்மையில் கடலில் மீன்பிடித்துக்  கொண்டிருந்த தமிழக மீனவர்கள் இருவரை நோக்கி இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு  நடத்தியதாகவும்,  தாக்கியதாகவும் புகார் கூறிய தமிழக மீனவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்றுவருகின்றனர். இந்த சம்பவத்துக்காக கடலோர காவல்படையைக் கண்டித்தும், கோவையில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய ஆளுநரைக் கண்டித்தும்  தமிழ்நாடு திராவிடர் கழகத்தினர்  வியாழக்கிழமை திருவள்ளுவர் திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கழகத்தின் ஒருங்கிணைப்பாளர்  நாகராசன் தலைமை வகித்தார். திராவிடர் கழகம், திமுக, திராவிடர் விடுதலைக் கழகம், தமுமுக, எஸ்டிபிஐ, மக்கள் விடுதலை முன்னணி, வெல்பேர் கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதையடுத்து 3 பெண்கள் உள்பட 27 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராசன் கூறியதாவது:  இலங்கை கடற்படைதான் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி வந்தது. ஆனால், தற்போது, இந்திய கடலோர காவல்படையே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது. தமிழக ஆளுநர் தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டுவருகிறார். எனவே, ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →