பணியிடம் ஒதுக்கக் கோரி மாநகராட்சி ஊழியர் உள்ளிருப்புப் போராட்டம்
பதவி உயர்வைத் தொடர்ந்து பணியிடம் ஒதுக்கி, ஊதிய உயர்வு வழங்கக் கோரி மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் சுகாதாரத் துறை ஊழியர் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பதவி உயர்வைத் தொடர்ந்து பணியிடம் ஒதுக்கி, ஊதிய உயர்வு வழங்கக் கோரி மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் சுகாதாரத் துறை ஊழியர் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவை மாநகராட்சியில் துப்புரவு அலுவலராக பிச்சைமணி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ,கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் பணியிடம் ஒதுக்கி, உரிய ஊதிய உயர்வை அளிக்கக் கோரி புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து அவர் கூறியது:
கோவை மாநகராட்சியில் கடந்த 1986-ஆம் ஆண்டு சுகாதார உதவியாளராகப் பணியில் சேர்ந்தேன். பின்னர் சுகாதார ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்று பணியாற்றி வந்த நிலையில், 2016-ஆம் ஆண்டு பணி மூப்பு மற்றும் தகுதியின் அடிப்படையில் சுகாதார அலுவலராகப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
இதற்கான உத்தரவை மாநகராட்சி ஆணையர் பிறப்பத்துள்ளார். ஆனால், பதவி உயர்வு அளிக்கப்பட்ட பிறகு மாநகராட்சி நிர்வாகம் சுகாதார அலுவலர் பணியாற்ற வேண்டிய மண்டலத்தையும், ஊதிய உயர்வையும் கொடுக்க மறுத்து வருகிறது. அதே நேரத்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்ட பிறகும் உரிய மண்டலம் ஒதுக்கி பணி செய்ய அனுமதிக்காத காரணத்தாலும், களப் பணி செல்ல வாகனம் வசதி ஏற்படுத்தித் தராமலும், தன்னை விட இளையோரிடம் அதிகாரத்தை வழங்கி மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, பிரதான அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பிச்சைமணியிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அலுவலக வளாகத்தில் போராட்டத்தைத் தொடர அனுமதிக்க முடியாது. எனவே உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், போராட்டத்தைக் கைவிட மறுத்த பிச்சைமணியை போலீஸார் வலுக் கட்டயமாக வெளியேற்றினர்.