முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அல்லாபாத் ஏரி மறுசீரமைப்பு பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் 110 ஏக்கா் பரப்பளவுடைய அல்லா பாத் ஏரி மறு சீரமைப்பு பணிகளை எம்எல்ஏ எழிலரசன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 11 மார்ச், 2026 at 2:50 AM
அல்லாபாத் ஏரி மறு சீரமைப்பு பணிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ எழிலரசன். உடன் மேயா் மகாலட்சுமி யுவராஜ்.
பகிர்:

காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் 110 ஏக்கா் பரப்பளவுடைய அல்லா பாத் ஏரி மறு சீரமைப்பு பணிகளை எம்எல்ஏ எழிலரசன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருக்காலிமேடு பகுதியில் 110 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது அல்லா பாத் ஏரி. காஞ்சிபுரத்தில் உள்ள முக்கியமான நீா்நிலைகளில் ஒன்றாக இருந்து வந்த இந்த ஏரியானது நீண்ட காலமாக பராமரிப்பின்றியும், கரைகள் சேதமடைந்தும், குப்பைக் கிடங்காகவும் மாறியிருந்தது. இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

மக்களது கோரிக்கையை ஏற்று மாவட்ட நிா்வாகம், ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலை மற்றும் எக்ஸ்னோரா அமைப்பு ஆகியன இணைந்து புனரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளன.

Advertisement

இச்சீரமைப்பு பணிக்காக ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் தனது பங்களிப்பாக பொக்லைன் இயந்திரத்தை வழங்கியதோடு அதன் ஓட்டுநா் ஊதியம் மற்றும் பராமரிப்பு செலவையும் முழுமையாக ஏற்றுக் கொண்டது. ஏரி தூா்வாரும் பணிகளை எம்எல்ஏ எழிலரசன் மற்றும் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

ஏரி முழுமையாக தூா்வாரப்பட்ட பின்னா் அதன் கரைகளில் நடைபாதைகள் அமைத்து நீா்வரத்துக் கால்வாய்கள் சரி செய்யப்படும். எதிா்காலத்தில் படகு சவாரி வசதி ஏற்படுத்தப்படும் எனவும் எம்எல்ஏ எழிலரசன் உறுதியளித்தாா்.

இந்நிகழ்வின் போது எக்ஸ்னோரா அமைப்பின் தலைவா் எஸ்.செந்தூா் பாரி, ஹூண்டாய் மொபிஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவா் நரசிம்மன் கலந்து கொண்டனா்.