அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோட்டூர் பேரூராட்சிஅலுவலகத்தை மலைவாழ்மக்கள் முற்றுகையிட்டு வியாழக்கிழமை போராட்டம் நடத்தினர்.
கோட்டூர் பேரூராட்சிக்கு உள்பட்ட சின்னார்பதி, நவமலை, பந்தக்கல்அம்மன்பதி, அன்பு நகர், புளியங்கண்டி, நெல்லித்துறை, செல்லப்பிள்ளைகரடு, மன்னம் உள்ளிட்ட பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதிகளில் குடிநீர், சுகாதாரம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்துதரப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கோட்டூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பேரூராட்சி நிர்வாகத்தினர், மலைவாழ் மக்களிடம்
பேச்சு நடத்தி அடிப்படை வசதிகள் செய்துதருவதாக உறுதியளித்தையடுத்து அனைவரும் கலைந்துசென்றனர்.