நொய்யல் ஆற்றில் நடைபெற்ற மணல் திருட்டை மறைக்க போலீஸார் முயற்சி: பாமக குற்றச்சாட்டு
நொய்யல் ஆற்றில் நடைபெற்ற மணல் திருட்டு குறித்துப் போதிய ஆதாரம் அளித்தும் போலீஸார் அதை மூடி மறைக்க முயற்சிப்பதாகக் கூறி ஆட்சியரிடம் பாமகவினர் புகார் அளித்துள்ளனர்.
நொய்யல் ஆற்றில் நடைபெற்ற மணல் திருட்டு குறித்துப் போதிய ஆதாரம் அளித்தும் போலீஸார் அதை மூடி மறைக்க முயற்சிப்பதாகக் கூறி ஆட்சியரிடம் பாமகவினர் புகார் அளித்துள்ளனர்.
கோவை, ஆலாந்துறை அருகே நொய்யல் ஆற்றில் சட்ட விரோதமாக மணல் திருடப்பட்டு வந்ததாகக் கூறி கொடிசியா அருகே வந்த லாரியை ஏப்ரல் 13-ஆம் தேதி பாமகவினர் மறித்தனர்.
இந்த விவகாரத்தில் நொய்யல் ஆற்றில் மணல் கடத்தப்படவில்லை, மாறாக எம்-சாண்ட் எடுத்து வந்த லாரியை மறித்ததாகக் கூறி பாமகவினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதுதொடர்பாக பாமக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் அசோக் ஸ்ரீநிதி உள்ளிட்ட அக்கட்சியினர் ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்த மனு விவரம்:
ஆலாந்துறை அருகே, நொய்யல் ஆற்றில், சட்ட விரோதமாக ஏப்ரல் 13-ஆம் தேதி அதிகாலை மணல் திருட்டில் ஈடுபட்டது தொடர்பாக விடியோ காட்சி ஆதாரம் எங்களிடம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர், உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸாரை வலியுறுத்தினோம். இதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளதாகத் தெரிவித்தோம்.
ஆனால், மணல் திருட்டை மறைக்க முயற்சித்து, லாரியை மறித்த எங்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், லாரியில் கொண்டு செல்லப்பட்டது எம்-சாண்ட் தான் என வட்டாட்சியர் அறிக்கை அளித்துள்ளார். மணல் திருட்டு விவகாரத்தில் போதிய ஆதாரம் அளித்தும் மணல் திருட்டை மூடி மறைக்க போலீஸார் முயற்சிக்கின்றனர்.
எனவே, நாங்கள் வைத்துள்ள ஆதாரத்தைக் கொண்டு உரிய விசாரணை நடத்தி, மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.