24 மணி நேரக் குடிநீர் விநியோகத் திட்டம் குறித்து ஆலோசனை
கோவை மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தைத் தொடங்குவது குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தைத் தொடங்குவது குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் பேசியதாவது:
அம்ருத் திட்டத்தின் கீழ் மாநகரப் பகுதிகளில் 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படும். இதில், முதல் கட்டமாக 60 வார்டுகளில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக, கோவை மாநகராட்சி நிர்வாகம், சூயஸ் நிறுவனத்துடன் இணைந்து பணிகளை மேற்கொள்கிறது.
இந்தத் திட்டப் பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீரான முறையில் குடிநீர் விநியோகம், குடிநீர் பயன்பாட்டை அளவிடுவதற்கான நவீன மீட்டர் அளவீட்டுக் கருவிகள் பொருத்துதல், குடிநீர்க் கட்டணம் வசூல், மக்களின் குறைகளைத் தீர்க்கும் பிரிவு, புதிய குடிநீர் இணைப்புகள் வழங்குதல், முறையாகக் கட்டணம் செலுத்தாத குடிநீர் இணைப்புகளைத் துண்டித்தல், டிஜிட்டல் முறையில் குடிநீர் விநியோகத்தைக் கண்காணிப்பது, குடிநீரின் தரத்தை நவீனக் கருவிகள் மூலமாகக் கண்காணிப்பது போன்றவை இந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன என்றார்.
இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி மேற்பார்வைப் பொறியாளர் நடராஜன், மாநகராட்சிப் பொறியாளர் லட்சுமணன், சூயஸ் நிறுவன துணைத் தலைவர் மகேந்திரா, 24 மணி நேர குடிநீர் விநியோகத் திட்ட இயக்குநர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.