நீலாம்பூரில் விவேகானந்தர் எழுச்சி நாள்விழா
சூலூர் அருகே விவேகானந்தர் எழுச்சி நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சூலூர் அருகே விவேகானந்தர் எழுச்சி நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீலாம்பூர் அருகே சுவாமி சிவானந்த பரமஹம்சர் 18-11-1937 ஆம் ஆண்டு தபோவனம் அமைத்து ஆன்மிக சிந்தனைகளை இப்பகுதிகளில் பரப்பி வந்துள்ளார். மேலும், அவர் தனது நிலத்தை இப்பணிக்காக வழங்கியவர். இங்கு, இவரது நினைவாக தற்போதும் தொடர்ந்து மனவளக் கலை, ஈஷா யோக மையம், வாழும் கலை ஆகிய மன்றங்கள் மூலமாக பொதுமக்களுக்கு ஆன்மிகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தபோவனத்தில் விவேகானந்தர் பிறந்த தின எழுச்சி நாள் விழா, மக்கள் சிந்தனைப் பேரவை வாசகர் வட்டத் துவக்க நாள் விழா, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. நீலாம்பூர் பள்ளி நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை என்.ஆர்.வி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கோவை பசுமை மாநகர் ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் அழகன் கருப்பண்ணன் முதன்மை உரையாற்றினார்.
ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இளைஞர் சக்தி இயக்கத்தின் தலைவர் டி.சம்பத்குமார், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பேராசிரியர் பி.கனகசபாபதி, சென்னையைச் சேர்ந்த தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும், அரசுப் பள்ளியில் பயின்று பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சமூக ஆர்வலர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.