அன்னூர் அருகே மாணிக்கம்பாளையத்தில் தனியார் நிறுவன ஊழியர் மர்மமான முறையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
அன்னூர் அருகே மசக்கவுண்டன்செட்டிபாளையம், பத்திரகாளியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் கோபால்சாமி (33), இவரது மனைவி சங்கீதா. கோபால்சாமி, ஓரைக்கால்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வந்தார். சங்கீதா அருகம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.
இந்நிலையில், கோபால்சாமி, தனது மனைவியிடம் இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறிவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு சென்றுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து வேறொரு செல்லிடப்பேசியில் இருந்து மனைவி சங்கீதாவைத் தொடர்பு கொண்ட கோபால்சாமி, தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார். அதன்பிறகு காலை வரை அவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், சங்கீதா வழக்கம்போல் புதன்கிழமை காலை பணிக்குச் சென்றுள்ளார். இதையடுத்து கோபால்சாமி மாணிக்கம்பாளையத்தில் கீழே விழுந்து கிடப்பதாக சங்கீதாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது கோபால்சாமி தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார். அன்னூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது.