கரவழிமாதப்பூர் ஊராட்சியில் கழிப்பிடம் கட்டும் திட்டத்தில் முறைகேடு புகார்: அதிகாரிகள் 2-ஆவது நாளாக ஆய்வு
கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட கரவழிமாதப்பூர் ஊராட்சியில் மத்திய அரசின் அனைவருக்கும் கழிப்பிடம் கட்டும்
கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட கரவழிமாதப்பூர் ஊராட்சியில் மத்திய அரசின் அனைவருக்கும் கழிப்பிடம் கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து மாவட்ட அதிகாரிகள் இரண்டாவது நாளாகவும் ஆய்வு மேற்கொண்டனர்.
கரவழிமாதப்பூர் ஊராட்சியில் கழிப்பிடங்கள் கட்டுவதில் மோசடி நடந்திருப்பதாக பயனாளிகள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து, மாவட்ட திட்ட அலுவலர் ரூபன் சங்கரராஜ் தலைமயில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கரவழிமாதப்பூர் ஊராட்சி பகுதியில் பயனாளிகளிடம் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பொதுமக்கள், தனிநபர் கழிப்பிடம் கட்டித் தருவதாகக் கூறி தங்களிடம ஏமாற்றி பணம் வசூலித்துள்ளனர். மேலும், அரசு அளித்த தொகையை 6 மாதங்களாகியம் தங்களுக்கு வழங்காமல் ஊராட்சி நிர்வாகம் ஏமாற்றிவிட்டதாக புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் மாதப்பூர், ராமச்சியம்பாளையம் ,தொட்டிபாளையம் , அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற் கொண்டனர். இந்த ஆய்வில் கழிப்பிடம் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
ஏற்கனவே கட்டப்பட்ட பழைய கழிப்பிடத்திற்கும் இந்தத் திட்டத்தில் பணம் தருவதாகக் கூறி ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கட்டாயப்படுத்தி கட்டடத்தின் அருகில் தங்களை நிற்கவைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பழைய கழிப்பிடக் கட்டட சுவரில் தற்போதைய திட்டத்தில்
கட்டப்பட்டதாக எழுதியுள்ளனர். இதற்காக ரூ. 3 ஆயிரத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதித் தொகையை பின்னர் தருவதாக கூறினார்கள். ஆனால், இது வரை மீதத் தொகையை வழங்கவில்லை என்றனர்.
இதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜ், ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் உடனிருந்தனர் .