கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க அரசிடம் கோரிக்கை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
கோவையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
உக்கடம் ஆடு அறுவைமனை அருகில் மாநகராட்சி தினசரி மொத்தம் மற்றும் சில்லறை மாங்காய் மற்றும் பழங்கள் மார்க்கெட்டின் புதிய கட்டடத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
புதிய மார்க்கெட் வளாகத்தில் மொத்தம் 24 கடைகள் உள்ளன. இந்தக் கடைகளுக்கு மிகவும் குறைந்த அளவிலான மாத வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்துக்கு மேம்பாலம், 24 மணி நேரம் குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. பல ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை தற்போது கோவை அடைந்துள்ளது.
தொண்டாமுத்தூர் மற்றும் அனைத்துப் பகுதிகளிலும் சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவையில் சர்வதேச அளவிலான கிரிக்கெட் மைதானம் அமைக்க முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில், ஆட்சியர் த.ந.ஹரிஹரன், கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யா, தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், மாநகராட்சி பழம் காய்கறி வியாபாரிகள் நலச்சங்க துணைசெயலாளர் பைசல், மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.