கோவை, சரவணம்பட்டி அருகே 4 மாத பெண் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, சரவணம்பட்டி விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி முத்துலட்சுமி. மகள் பூஜாஸ்ரீ(4 மாதம்). இந்நிலையில், வீட்டில் படுத்திருந்த குழந்தை பூஜாஸ்ரீ வாயில் நுரை தள்ளியபடி செவ்வாய்க்கிழமை காலை மயங்கிக் கிடந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்ததற்கு பின்பே இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவித்தனர்.