ஆதரவற்ற இல்லத்தில் தங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது தாயார் ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தார்.
கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஆதரவற்றோர் இல்லத்தில் கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் மகள் பவித்ரா (11) தங்கி அருகில் உள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோர் ஆதரவு இல்லாத காரணத்தால் ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருந்தார்.
இந்த நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பவித்ரா செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்ததால் அவரது உடல் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்த சிறுமி பவித்ராவின் தாயார் சித்ரா, தனது உறவினர்களுடன் ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் மனு அளித்தார். அதில், தனது மகள் பவித்ராவின் சாவில் மர்மம் உள்ளது. எனவே, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.