ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி
துடியலூரை அடுத்த வட்டமலைப்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துடியலூரை அடுத்த வட்டமலைப்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தோடு இணைந்து, கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை, நாட்டுநலப்பணித் திட்டம், யங் இந்தியா ஆகியன சார்பில் நடைபெற்ற இந்த அறிவியல் கண்காட்சியை, கல்லூரியின் முதல்வர் என்.ஆர்.அலமேலு தொடக்கிவைத்தார்.
இதில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தாங்கள் உருவாக்கியிருந்த அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தியிருந்தனர். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு, பெரியநாயக்கன்பாளையம் வட்டார கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பொன்.தன்ராஜ் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். யங் இந்தியா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தாமஸ் ரொனால்ட், நாட்டுநலப்பணித் திட்டத் தலைவர் கேசவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் எம்.செந்தமிழ்செல்வி வரவேற்றார். உதவிப் பேராசிரியை ஜான்சிராணி அறிக்கை சமர்ப்பித்தார். அறிவியல் மன்றத்தின் தலைவர் உதயராணி நன்றி கூறினார்.