லஞ்ச வழக்கில் மருத்துவமனை ஊழியருக்கு 2 ஆண்டு சிறை
ரூ.150 லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு மருத்துவமனை ஊழியருக்கு கோவை நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
ரூ.150 லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு மருத்துவமனை ஊழியருக்கு கோவை நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ். கோவை, காந்திபுரத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், உடற்தகுதி சான்றிதழ் வேண்டி கோவை அரசு மருத்துவமனையில் 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விண்ணப்பித்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த
பதிவேடு ஊழியர் மணியன் சான்றிதழ் அளிக்க ரூ. 150 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து ரமேஷ் கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் ரமேஷிடம் ரசாயனம் தடவிய நோட்டுகளை கொடுத்து
அனுப்பிவைத்தனர். பின்னர் அவர் மணியனிடம் பணத்தைக் கொடுக்கும்போது மறைந்திருந்த காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கானது கோவை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஜான்மினோ புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார்.
இதில், மணியனுக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இந்த வழக்கில் இருந்து பிணையில் வெளியே வந்த மணியன் ஏப்ரல் 26-ஆம் தேதிக்குள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார்.