அன்னூரில் உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறுகிறது. இதில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்த காய்கறிகளை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து அன்னூர் நகருக்கு கொண்டு வந்து அங்கிருந்து மேட்டுப்பாளையம் அல்லது ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதனால் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். அதனால் அன்னூரில் உழவர்சந்தை தொடங்கினால் விவசாயிகள் தங்களது விளை பொருள்களை எளிதில் விற்பனை செய்ய முடியும். எனவே, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அன்னூரில் உழவர்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.