அன்னூர் அருகே மரத்தின் மீது மோதிய வேன்: 2 பேர் சாவு; 11 காயம்
கோவை மாவட்டம், அன்னூர் அருகே மரத்தின் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே மரத்தின் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 2 பேர் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (44). இவர், தனது உறவினர்களுடன் நீலகிரிக்கு சுற்றுலா செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு வேனில் வந்து கொண்டிருந்தார். வேனை பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த ராமதாஸ் (31) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை, ஜெ.ஜெ. நகர் அருகே திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மகன் சீனிவாசன் (22), பாஸ்கரன் மகன் ரிஷி (11), செல்வராஜ் மனைவி சாந்தி (60), செல்வராஜ் மகன் பாஸ்கரன் (44), அவரது மனைவி நித்யா(33), மகள் லயா(எ)தேவி(13), செல்வராஜ் மகன் வினோத்குமார் (30), தமிழ்மணி மகள் காவ்யா (12), மகன் கமல் (8), ஜெயராமன் மகன் பிரவீண் (28), ஜெயராமன் மகள் மகாலட்சுமி (26), வேலு மகன் பெரியசாமி (31), ஓட்டுநர் ராமதாஸ் ஆகிய 13 பேர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த அன்னூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், அன்பழகன் மகன் சீனிவாசன் (22), பாஸ்கரன் மகன் ரிஷி (11) ஆகியோர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அன்னூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.