திருவண்ணாமலை கிரிவலம் சென்றிருப்போர் கவனத்துக்கு..
திருவண்ணாமலை ரயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் கிரிவலம் செல்ல நேற்று மாலை முதலே வந்திருந்த நிலையில், இன்று காலை முதல் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ஏராளமான கூட்டம் திரண்டுள்ளது.
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை முதலே பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமான மக்கள் திருவண்ணாமலை வரத் தொடங்கினர்.
நேற்று இரவு முதல் திருவண்ணாமலையைச் சுற்றிலும் கிரிவலம் வந்த பக்தர்கள் காலையில் கிரிவலம் முடிந்து ஏராளமானோர் பேருந்து நிலையங்களுக்கும், ஆயிரக்கணக்கானோர் திருவண்ணாமலை ரயில் நிலையத்திலும் குவியத் தொடங்கினர்.
Advertisement
ஒரு ரயில் வந்ததும் அதில் ஏற ஏராளமானோர் முண்டியடித்துக் கொண்டு நுழைவாயில் அருகே சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படை காவலர்கள் வந்து ஒழுங்கு படுத்தியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
திருவண்ணாமலையில் ஆண்டுதோறும் பகல் இரவு என்றில்லாமல் மக்கள் கிரிவலம் சென்றுவரத் தொடங்கியிருக்கும் நிலையில் சித்ரா பௌர்ணமியில் கட்டாயம் கிரிவலம் செல்ல வேண்டும் என்று எங்கெங்கோ இருந்தும் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். முன்னேற்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தாலும் கட்டுக்கடங்காத கூட்டம் அசாதாரண சூழலை ஏற்படுத்தியிருந்தது.
எனினும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியான முறையில் கிரிவலம் கிட்டத்தட்ட நிறைவு பெற்றிருக்கிறது. மக்களும் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஏராளமான பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் திரண்டிருப்பதால் முண்டியடித்து ரயிலில் ஏறும் நிலை உள்ளது. எனவே, ரயில் நேரம், கூட்டம் போன்றவற்றை அறிந்துகொண்டு ரயில் நிலையம் செல்வது நல்லது என்று கூறப்படுகிறது.