கருவூலத் துறை கணினிமயமாக்கல் ஆய்வுக் கூட்டம்
கருவூலத் துறையை முழு கணினி மயமாக்கல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கருவூலத் துறையை முழு கணினி மயமாக்கல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நீலகிரி மாவட்டங்களின் கருவூல அதிகாரிகள், கணக்கு அலுவலர்கள், உதவிக் கருவூல அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், அரசின் முதன்மைச் செயலரும், கருவூலத் துறை ஆணையருமான தென்காசி எஸ்.ஜவஹர் பங்கேற்று ஆய்வுப் பணிகளை மேற்பார்வையிட்டார்.
அதைத் தொடர்ந்து, கூட்டத்தில் ஜவஹர் பேசியதாவது:
நிதி மேலாண்மை தொடர்பான அரசுப் பணிகள் திறம்பட நடைபெற கருவூலத் துறை கணினி மயமாக்கப்பட உள்ளது. இதற்காக ரூ. 288.91 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக மாநிலம் முழுவதிலும் உள்ள 29 ஆயிரம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள், நேரடி இணையத்தின் மூலமாக சம்பளப் பட்டியல், இதர பட்டியல்களைக் கருவூலத்தில் சமர்ப்பிக்க முடியும்.
இத்திட்டத்தின் மூலமாக 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு, இதர விவரங்கள் உடனுக்குடன் பதியப்படும். அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வுபெறும் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலமாக கணினிமயமாகிறது.
இதன் மூலமாகப் பணிப் பதிவேடுகளைப் பராமரிக்கும் பணியில் இருந்து அலுவலர்கள் விடுபட்டு தங்களது துறையின் ஆக்கப்பூர்வப் பணிகளில் ஈடுபட முடியும். பணிப் பதிவேடுகள் ஊருக்கு ஊர் மாற்றப்படுவதால் ஏற்படும் காலவிரயம் குறைவதுடன், பணிப் பதிவேடு காணாமல் போவதும் முடிவுக்கு வரும் என்றார்.இந்த ஆய்வுக் கூட்டத்தில் கருவூலத் துறையின் கூடுதல் இயக்குநர் மகாபாரதி, மண்டல இணை இயக்குநர் செல்வசேகர், வேளாண் பல்கலைக்கழக நிதிக் காப்பாளர் சசிகலா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.