முகப்பு
கோயம்புத்தூர்

டாஸ்மாக் ஊழியர்களிடம் ரூ. 3 லட்சம் கொள்ளை

டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து ரூ. 3 லட்சத்தை மர்ம நபர்கள் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையடித்துச் சென்றனர். கோவை மாவட்டம்,

Updated On : 13 நவம்பர், 2018 at 3:45 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:47 PM

டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்து ரூ. 3 லட்சத்தை மர்ம நபர்கள் 4 பேர் ஞாயிற்றுக்கிழமை இரவு கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள காங்கேயம்பாளையத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இக்கடையில், திருப்பூர் மாவட்டம், பெதப்பம்பட்டியைச் சேர்ந்த வீரன் மகன் வேலுசாமி, தருமபுரி மாவட்டம், ஒட்டப்பட்டியைச் சேர்ந்த மாதையன் மகன் ஜெகதீஷ் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இவர்கள், கடையின் அன்றைய விற்பனைத் தொகையான ரூ. 3 லட்சத்தை எடுத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு 10.30 மணியளவில் காங்கேயம்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்கு எதிரே 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர், வேலுசாமி, ஜெகதீஷ் மீது மிளகாய் பொடியைத் தூவியுள்ளனர்.
நிலைகுலைந்த அவர்களது முதுகு, வயிறு, கை உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்திய மர்ம நபர்கள், வேலுசாமி, ஜெகதீஷ் ஆகியோர் வைத்திருந்த ரூ. 3 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
காயம் அடைந்த இருவரும் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், கருமத்தம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கர் தலைமையில் சூலூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.