தமிழகம் முழுவதிலும் 150க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் மேலும் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 78 வாகனங்கள் மீட்கப்பட்டன.
கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிச் செல்வதாக காவல் ஆணையருக்குப் புகார்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில் துணை ஆணையர் பி.பெருமாள் மேற்பார்வையில், உதவி ஆணையர் சோமசேகர் தலைமையில் ஆய்வாளர்கள் மோகன்ராஜ், ஆனந்த் மற்றும் காவலர்களைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தத் தனிப்படையினர் மேற்கொண்ட விசாரணையில், திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்த ஜெ.ரசூல் முகைதீன் (43), இசக்கி பாண்டி இருவரும் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 48 வாகனங்கள் மீட்கப்பட்டன.
மேலும், அவர்கள் அளித்த தகவலின்பேரில் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.துரை (42), மேலப்பாளையம் குறிச்சியைச் சேர்ந்த எஸ்.முகமது மொய்தீன் (40) ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருடிய 78 இருசக்கர வாகனங்களை தனிப்படையினர் மீட்டனர்.
பின்னர் அவர்கள் இருவரும் குற்றவியல் நீதித் துறை நடுவர் மன்றம் எண் 3இல் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், இதுதொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த மாடசாமி என்பவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.