பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய மத்தியில் ஆளும் பாஜக அரசு தயக்கம் காட்டி வருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெறும் மதிமுக மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த அவர், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கலாம் என தமிழக அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய பாஜக அரசு தயக்கம் காட்டி வருகிறது.
பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தால் 7 பேருக்கும் விடுதலை இருக்கும் என்ற எண்ணம் மக்களிடம் இருந்த நிலையில், தற்போது உண்மை நிலை வேறாக உள்ளது.
தமிழகத்தில் வருமான வரித் துறை, சி.பி.ஐ சோதனைகள் மூலம் அரசை அச்சுறுத்துகிறார்கள் அல்லது மக்களிடம் அக்கட்சியின் மதிப்பை குறைக்கவே இதுபோன்ற சோதனைகள் நடைபெறுகின்றன என்ற கருத்தும் நிலவுகிறது.
குட்கா விவகாரத்தில் புகாருக்குள்ளான அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கட்சியில் பதவி வழங்கியிருப்பது வியப்பை அளிக்கிறது என்றார்.