வெட்கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டியை 5 சதவிகிதமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனின் தேர்தல் வாக்குறுதிக்கு கோயமுத்தூர் வெட்கிரைண்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் (கவுமா) வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் சாஸ்தா எம்.ராஜா, செயலாளர் நல்லதம்பி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவையில் 1,200 வெட் கிரைண்டர் மற்றும் உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்களும், அதை நம்பி 40 ஆயிரம் தொழிலாளர்களும் உள்ளனர். ஜிஎஸ்டி அமல்படுத்தியபோது, வெட் கிரைண்டர்களுக்கு 28 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது.
அதனை மத்திய கயிறு வாரியத் துறைத் தலைவராக இருந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணனின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.
அவர், எங்கள் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்துக்கும், ஜிஎஸ்டி கவுன்சிலின் கவனத்துக்கும் கொண்டு சென்றதன் விளைவாக வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.
அதன் பிறகு, 12 சதவிகித ஜிஎஸ்டியை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என்று சி.பி.ராதாகிருஷ்ணனிடம் மீண்டும் கோரிக்கை வைத்தோம். அதன்பேரிலும் அவர் முயற்சிகள் மேற்கொண்டார். தற்போது, கோவை மக்களவை உறுப்பினராக போட்டியிடும் நிலையில், வெட் கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டியை 5 சதவிகிதமாக குறைப்போம் என வாக்குறுதி அளித்துள்ளார்.
இதற்கு கோயமுத்தூர் வெட்கிரைண்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.