தனியார் எஸ்டேட்டில் மரம் வெட்ட அனுமதி வழங்கிய வனத் துறையைக் கண்டித்து வால்பாறையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வால்பாறை பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தொகுதிச் செயலாளர் வீரமணி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்கப் பொதுச்செயலாளர் கேசவமுருகன் சிறப்புரையாற்றினார்.
பலா, ஈட்டி உள்ளிட்ட காட்டு மரங்களை வெட்டக் கூடாது என்று அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. தற்போது, வால்பாறையை அடுத்த தனியார் எஸ்டேட்டில் மரங்களை வெட்ட வனத் துறையினர் அனுமதி வழங்கியதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் எல்.பி.எப். தொழிற்சங்கத் தலைவர் சௌந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.