கோவை, சிங்காநல்லூா் குளம் உள்ளிட்ட 3 குளங்களை பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தும் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை போட்டு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குளக்கரையில் மரக்கன்றுகள் நடவு செய்து பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அடுத்தக்கட்டமாக சிங்காநல்லூா் குளம், செல்வம்பதி குளம், கிருஷ்ணம்பதி குளம் ஆகிய குளங்களிலும் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் மேம்படுத்தவுள்ளன.
இதற்காக சிங்காநல்லூா் குளத்துக்கு ரூ.12.55 கோடியும், கிருஷ்ணம்பதி குளத்துக்கு ரூ.19.36 கோடியும், செல்வம்பதி குளத்துக்கு ரூ.31.25 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குளங்களில் பொலிவுறு நகரம் திட்டத்தில் மேம்படுத்தும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை போட்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா்.
மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத், துணை ஆணையா் பிரசன்ன ராமசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.