சுதந்திரப் போராட்டத் தியாகியும், கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்க நிறுவனருமான என்.ஜி.ராமசாமியின் 76-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ராமநாதபுரம் சுங்கம் ரவுண்டானாவில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து சங்க அலுவலகத்தின் எதிரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து செளரிபாளையத்தில் உள்ள மனவளம் குன்றியோருக்கான செஷயர் இல்லத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மாநில ஹெச்.எம்.எஸ். சங்க கெளரவத் தலைவர் ஏ.சுப்ரமணியம், மாநிலச் செயலர் டி.எஸ்.ராஜாமணி, பொருளாளர் கே.சுப்பையன், செயலர்கள் சி.சண்முகம், ஜி.மனோகரன், பி.சுப்ரமணியன், காட்டூர் சுப்ரமணியம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஐ.என்.டி.யூ.சி. சார்பில் வெள்ளலூரில் உள்ள என்.ஜி.ராமசாமியின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கத் தலைவர் சீனிவாசன், பொதுச் செயலர் கோவை செல்வன், நிர்வாகிகள் ஷோபனா செல்வன், வழக்குரைஞர் எஸ்.குப்புசாமி, டி.வெங்கிடு, ஏ.ஜி.ஆறுச்சாமி, சிங்கை வி.பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.