பார்சல் நிறுவன ஊழியரைத் தாக்கி நகைகள் கொள்ளை:சுடுகாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 1 கிலோ நகைகள் மீட்பு
கோவையில் பார்சல் நிறுவன ஊழியரைத் தாக்கி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக
கோவையில் பார்சல் நிறுவன ஊழியரைத் தாக்கி கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சுடுகாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கிலோ தங்க நகைகளைப் போலீஸார் மீட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மாங்கோ சிங். இவரது மகன் பிரதீவ் சிங். இவர் கோவை மரக்கடை அருகே மில் சாலையில் உள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிறுவனம் கோவையில் உள்ள தங்க நகைப் பட்டறை, நகை வியாபாரிகளிடம் இருந்து நகைகளைச் சேகரித்து வெளி மாநிலங்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வந்தது.
இந்நிலையில், 6 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை மும்பை செல்லும் விமானத்தில் அனுப்பி வைப்பதற்காக பிப்ரவரி 7 ஆம் தேதி அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் பிரதீவ் சிங் சென்று கொண்டிருந்தார். அப்போது, பீளமேடு அருகே சென்றபோது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மூவர் பிரதீவ் சிங்கை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையில், தனியார் பார்சல் நிறுவன பெண் ஊழியர் பிரவீணா, அவரது கணவர் உள்பட 5 பேரை கோவை மாநகர போலீஸார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிரவீணாவின் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் உள்ள அவரது வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவரது வீட்டுத் தோட்டத்தில் புதைத்து வைத்திருந்த ரூ.1.5 கோடி மதிப்பிலான நகைகளை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர். மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை தனது கூட்டாளிகளிடம் கொடுத்து தனித்தனியாகப் பிரித்து வைத்திருந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சுமார் 1 கிலோ தங்க நகைகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த நகைகளைப் போலீஸார் வெள்ளிக்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் சிறிய அளவிலான வைர நகைகள் எங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
விரைவில் மொத்த நகைகளும் மீட்கப்படும் என்று காவல் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.