பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் கடைக்கு பெண்கள் பூட்டுப் போட்டு புதன்கிழமை போராட்டம் நடத்தினர்.
பொள்ளாச்சியை அடுத்த செமணாம்பதி அருகே கடந்த 20 நாள்களுக்கு முன்பு பொதுமக்களின் எதிர்பையும் மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.
இந்த டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதில் இருந்து மது அருந்துவோரால் தங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், டாஸ்மாக் கடை முன்பு புதன்கிழமை கூடிய 40க்கும் அதிகமான பெண்கள் டாஸ்மாக் கடைக்குப் பூட்டுபோட்டனர். டாஸ்மாக் கடையை செயல்பட விடமாட்டோம் எனக் கூறி, கடை முன்பு தர்னாவில் ஈடுபட்டனர்.
பெண்கள் போராட்டத்தால் கடை திறக்கப்படவில்லை. டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்ததை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.