மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி கோவையில் வியாழக்கிழமை அதிமுகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. அப்போது, மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தலைமையில் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இருந்து அதிமுகவினர் ஊர்வலமாகச் சென்று அவிநாசி சாலையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., அண்ணா மற்றும் ஜெயலலிதா ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் மாநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆர். புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி கட்சிக் கொடி ஏற்றி, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந் நிகழ்ச்சியில் மாநகர் மாவட்டச் செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் எம்.எல்.ஏ., சட்டப் பேரவை உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ச்சுணன், வி.சி.ஆறுக்குட்டி, முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்சியினர் கலந்து கொண்டனர். இதேபோல தெற்கு சட்டப் பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழாவில் கட்சித் தொண்டர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.