சூலூரில் தீவன அரவை ஆலைகளில் கேரள போலீஸார் சோதனை?
சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தீவன அரவை ஆலைகளில் சோதனை நடத்த
சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தீவன அரவை ஆலைகளில் சோதனை நடத்த கேரள போலீஸார் சூலூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தனர்.
கேரளத்தில் கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திய உணவு பாதுகாப்புக் கழக கிடங்குகளில் இருந்த உணவு தானியங்கள் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு கெட்டுப் போயின.
அந்த கெட்டுப்போன தானியங்கள் கிடங்குகளில் காணவில்லை எனவும், அவை தமிழகம், கர்நாடகம் மாநிலங்களில் உள்ள கோழித் தீவன அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என அந்த கேரள மாநில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், கேரள மாநிலம், வாளையாறு காவல் நிலையத்திலிருந்து உதவி ஆய்வாளர் அன்சார் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் சூலூர் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்திருந்தனர்.
பின்னர் அவர்கள் சூலூர் போலீஸார் உதவியுடன் சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தீவன அரவை ஆலைகளில் சோதனை நடத்த சென்றனர். அப்போது இரவு ஆகிவிட்டதால் ஆலையில் புதன்கிழமை காலை சோதனை நடத்தலாம் என கேரள போலீஸார் சென்றதாக தெரிகிறது.