முதியவரைத் தாக்கி பணம் பறிக்க முயன்ற இருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
முதியவரைத் தாக்கிப் பணம் பறிக்க முயன்ற இருவரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
முதியவரைத் தாக்கிப் பணம் பறிக்க முயன்ற இருவரைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
கோவை, ரத்தினபுரியைச் சேர்ந்தவர் அருள்பிரகாசம் (60). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு கடையை மூடிவிட்டு அன்றைய வியாபாரப் பணத்துடன் வீட்டுக்குப் புறப்பட்டார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அருள்பிரகாசத்தின் கையில் இருந்த பணப்பையைப் பறிக்க முயன்றனர். ஆனால், அருள்பிரகாசம் பணப் பையைத் தராமல் போராடினார். அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர். இதையடுத்து அருள்பிரகாசத்தின் சப்தம் கேட்டு அங்கிருந்தப் பொதுமக்கள் ஒன்றுகூடி அந்த இருவரையும் மடக்கிப் பிடித்து ரத்தினபுரி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலைச் சேர்ந்த மணிவண்ணன் (25), விஜயகுமார்(24) என்பது தெரியவந்தது. மேலும், மணிவண்ணன் மீது ஏற்கெனவே பல திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும், இருவரும் கோவையில் வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.