சூலூர் அருகே உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சூலூர் அருகே உள்ள இடையர்பாளையம், போகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உயர் மின் கோபுர நில அளவீட்டுப் பணிகள் சூலூர் வருவாய்த் துறையினர், காவல் துறையினர், பவர் கிரிட் அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டம் நடத்தினர். மேலும் அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, கண்ணம்பாளையம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் முருகேசன், செல்வராஜ் உள்ளிட்டோரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியருடன் கலந்தாலோசிப்பது என முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.