கோவையில் மூதாட்டியின் வீட்டில் இருந்து 10 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற பெண்ணை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவை, செல்வபுரம் அருகே எல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்தவர் ரத்தினம் (67). இவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு, அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து வியாழக்கிழமை (ஜூலை 11) வீட்டுக்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது, பேருந்தில் உடன் வந்த பெண் ஒருவர் மூதாட்டியிடம் பேச்சுக் கொடுத்து தெரிந்தவர்போல் காட்டிக்கொண்டுள்ளார். இதனால், அப்பெண்ணை தனது வீட்டுக்கு மூதாட்டி அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், மூதாட்டி அசந்திருந்த நேரத்தில் வீட்டில் இருந்த 10 சவரன் நகை, ரூ.60 ஆயிரம் பணத்தை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து மூதாட்டியின் பேத்தி ஹேமலதா அளித்த புகாரின்பேரில் செல்வபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.